
ஷம்பலா

ஷம்பலா என்பது கற்பனைக்கதை அல்ல. பேரொளியின் நகரமான ஷம்பலா, இரண்டாம் மன்வந்தரத்தில் உருவானது. ஷம்பலா, நமது பூமியின் ஒரு பகுதியாகும். ஆனால், அது நம் புறக் கண்களுக்குப் புலப்படாத, நுட்பமான தளத்தில் அமைந்துள்ளது. ஆர்யவர்த பள்ளத்தாக்கில், மிதக்கும் ஒளிக் கோளத்தின் உள்ளே இருக்கும் நிலப்பரப்பில் ஷம்பலா உள்ளது. இந்த மிதக்கும் ஒளிக் கோளம், முன்பு கோபி பாலைவனத்தில் இருந்தது, தற்போது பூட்டான் பகுதியில் உள்ளது.
ஷம்பலா நகரம் முதலில் ரிஷிகளுக்காக உருவாக்கப்பட்டது, ஆனால், பின்னர் பல்வேறு நோக்கங்களுக்காக தெய்வீக அவதாரங்கள், தெய்வங்கள் மற்றும் விஷேசமான ஆத்மாக்களுக்கும் அது வசிப்பிடமானது. ஷம்பலா உருவான பிறகு, மார்க்கண்டேய மகரிஷி இந்த மகத்துவமான இடத்தில் வாழ்வதற்கு நிறைய ரிஷிகளுக்கு வழிகாட்டியுள்ளார். ஷம்பலாவின் குடிமக்களை வழிநடத்த, ஆட்சியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டி இருந்தது. மிகவும் மகத்துவம் மிக்க, உன்னத ஆத்மாக்கள் ஷம்பலாவின் ஆட்சியாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள் ஷம்பலாவின் மைத்ரேயர்கள் என்று அழைக்கப்பட்டனர். ஷம்பலாவில் சுமார் 5 - 6 மைத்ரேயர்கள் உள்ளனர். இதில் ஷம்பலாவின் அரசரான மைத்ரேயர் மற்றும் கல்கி பகவானும் அடங்குவர். கல்கி பகவான், ஷம்பலாவின் மிக உயர்ந்த மைத்ரேயர் ஆவார். அவர் தனது ஆற்றல்களுடன் ஒன்றிணையும் மக்கள் அனைவருக்கும் வழிகாட்டி வருகிறார். மைத்ரேயர்களுக்கு நமது பூமி உட்பட பல்வேறு உலகங்களை நிர்வகிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஷம்பலா எந்த ஒரு மதத்தையும் சேர்ந்தது அல்ல. இவ்வுலகில் வாழும்பொழுதே நாம் ஷம்பலா வாசிகளாக மாறலாம். அதிகமான மக்கள் தன்மாற்றம் அடையும்பொழுது, ஷம்பலாவிற்கும் இவ்வுலகிற்கும் இடையிலான எல்லைகள் குறையத் தொடங்கும். முழு உலகமும் ஷம்பலாவாக மாறி பொற்காலத்திற்கு வழி வகுக்கும். சத்ய யுகத்தில், முழு உலகும் ஷம்பலாவாக மாறும்.
ஷம்பலா உருவான கதை:

நமது பூமியில் பிரளயம் ஏற்பட்ட பொழுது, மார்க்கண்டேய மகரிஷி சிவபெருமான் அளித்த வரம் காரணமாகப் பிரளயத்திலிருந்து தப்பினார். முழுவதும் தண்ணீரால் சூழப்பட்டு, இருளில் மூழ்கியிருந்த பூமியில், பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நாள் மார்க்கண்டேய மகரிஷி ஒரு இலையின் மேல் நீல வண்ணக் குழந்தை ஒன்று மிதக்கக் கண்டார். உடனே அவருக்கு, அந்தக் குழந்தை யார் என்ற உண்மை உதித்தது. அந்தக் குழந்தை, பகவான் மகாவிஷ்ணு தான் என்பதை உணர்ந்தார். பகவான் விஷ்ணு அவருக்கு விஸ்வரூப தரிசனம் அளித்து, விரைவில் நீர் வடிந்து ஒரு நிலம் தோன்றும் என்று கூறினார். அவ்வாறே, தண்ணீர் வடிந்த பின் தோன்றிய நிலத்திற்கு, நீல வண்ணக் குழந்தையின் (ஷ்யாம பாலா) நினைவாக, ஷ்யாம பால த்வீபா என்று பெயரிடப்பட்டது. காலப்போக்கில், இப்பெயர் மருவி ஷம்பலா என்றானது.
ஷம்பலாவின் சிறப்பு:

ஷம்பலா முழுவதும் பேரன்பும், ஒற்றுமையும் நிலவுகிறது. ஷம்பலாவின் குடிமக்கள் பேரொளி வீசிப் பிரகாசிக்கின்றனர். பேரொளியே அவர்களின் உந்து சக்தியாக இருந்து, அவர்களது அன்றாடச் செயல்களைச் செய்ய வழிகாட்டுகிறது. அவர்கள் ஷம்பலாவின் சட்டங்களையும், கொள்கைகளையும் சிரத்தையுடன் பின்பற்றுகிறார்கள். ஷம்பலாவில் அன்பு இல்லாத இடமே இல்லை. ஒவ்வொரு மூலையிலும் அன்பு மட்டுமே நிறைந்திருக்கிறது. ஷம்பலாவின் சிறப்பானது அங்குள்ள மக்கள் அனைவரிடத்திலும் இருக்கும் ஐக்கியத்தன்மை ஆகும். அவர்கள் அனைவரும் மிகவும் புத்திசாலிகள், சக்தி வாய்ந்தவர்கள், ஆக்கப்பூர்வமானவர்கள் மற்றும் உலகிற்கு உதவ எப்பொழுதும் தயாராக உள்ளார்கள். அவர்கள் என்றும் இளமையாகவும், அழகாகவும் இருப்பதாக நம்பப்படுகிறது. ஷம்பலா நகரம் பொன்னிறத்தில் ஜொலிப்பதாகவும், அங்கு வாழும் மக்களும் பொன்னிறத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நகரம், அப்பழுக்கற்ற, எவ்வித எதிர்மறைத் தன்மையுமற்ற, மிகச் சிறந்த நகரமாகக் கருதப்படுகிறது. இந்த நகரைச் சுற்றியுள்ள சக்திவாய்ந்த பாதுகாப்பு வளையம் காரணமாக, இம்மியளவு எதிர்மறைத் தன்மை கூட ஷம்பலாவின் அருகில் அணுக முடியாது.
மெய்ஞானம் அடைந்தவர்களுக்கு ஷம்பலாவின் கதவுகள் எப்பொழுதும் திறந்தே இருக்கும். ஷம்பலா, சிரஞ்சீவிகளின் இல்லமாகும். கைலாயம், ஷம்பலாவின் நுழைவாயில் என்று சிலர் நம்புகிறார்கள். திபெத்தியர்கள் பலர் கைலாயத்தைச் சுற்றிப் பிரதட்சணம் செய்யும்பொழுது, ஷம்பலாவின் புனித ஆற்றல்களைப் பெறுவதற்காக, 'ஓம் மணி பத்மே ஹம்' எனும் மந்திரத்தைத் தொடர்ந்து உச்சரிப்பதைக் காணலாம்.
ஷம்பலாவை அடைதல்:

ஷம்பலாவை அடைதல் என்பது அறிஞர்கள் மத்தியிலும், ஆன்மிகத்திலும் மிகவும் ஆராய்ச்சி செய்யப்பட்ட தலைப்புகளில் ஒன்றாகும். பூமியில் வாழ்க்கை செழித்தது, அநீதியும் வளர்ந்தது, இதனால் ஷம்பலா மெதுவாகச் சாமானியர்களால் அணுக முடியாததாக மாறியது. ஷம்பலாவை சுற்றி பேரொளி மற்றும் ஆற்றல்களால் ஆன பாதுகாப்பு அடுக்குகள் பல உருவாகின. இதனால் யாரும் உள்ளே நுழைய முடியாதபடி ஷம்பலா நிரந்தரமாக மூடப்பட்டது என்று அர்த்தமில்லை. ஒரு நபர் உடல், மனம், புத்தி என அனைத்து நிலைகளிலும் தூய்மையானவராக மாறும்பொழுது, அவர் ஷம்பலாவிற்குள் நுழையத் தகுதியுடையவர் ஆகிறார். இருப்பினும், தெய்வத்தின் அழைப்பு அல்லது ஏதேனும் தேவை இல்லாமல் ஒருவர் ஸ்தூல உடலுடனோ அல்லது சூக்குமமாகவோ ஷம்பலாவிற்குள் நுழைய முடியாது என்பதும் உண்மை. தற்செயலாக யார் வேண்டுமானாலும் உள்நுழைய முடியாது. ஷம்பலாவின் சட்டங்கள் கடுமையானவை, வாயில்கள் உறுதியானவை.
ஷம்பலா எந்த ஒரு மதத்தையும் சேர்ந்தது அல்ல. இவ்வுலகில் வாழும்பொழுதே நாம் ஷம்பலா வாசிகளாக மாறலாம். அதிகமான மக்கள் தன்மாற்றம் அடையும்பொழுது, ஷம்பலாவிற்கும் இவ்வுலகிற்கும் இடையிலான எல்லைகள் குறையத் தொடங்கும். முழு உலகமும் ஷம்பலாவாக மாறி பொற்காலத்திற்கு வழி வகுக்கும். சத்ய யுகத்தில், முழு உலகும் ஷம்பலாவாக மாறும்.
எங்களைப் பின்தொடரவும்.
பொன்மொழிகள் களஞ்சியம் ...